புற்றுநோயால் தாம் அனுபவித்த உளவியல் ரீதியான சிரமங்களை, பிறர் அனுபவிக்காமல் இருக்க இயன்ற அளவு உதவுவதே தம் வாழ்வின் நோக்கம் என்று எழில் மதியன், 65, கூறுகிறார். பெருங்குடல் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய் இரண்டையும் இவர் கடந்து வந்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு புற்றுநோய் கண்டறியப்பட்டு, ஆறு மாத காலம் அறுவை சிகிச்சை, 28 கதிர்வீச்சு சிகிச்சை அமர்வுகள், எட்டு கீமோதெரப்பி அமர்வுகள் என நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ள இவர், தொடர்ந்து பல புற்றுநோய் ஆதரவு மன்றங்களில் தொண்டூழியம் செய்து வருகிறார். புற்றுநோயாளிகளுக்கு உளவியல், சமூக ஆதரவும் இவர் வழங்கி வருகிறார்.
தம் 50வது வயதில் புற்றுநோய் கண்டறியப்பட்டபோது, தாமும் தம் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்து துவண்டு போனதை திரு எழில் நினைவுகூர்ந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயாரையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால், புற்றுநோய்க் கட்டிகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையும் இதர சிகிச்சையும் செய்துகொள்ள தம்மை தயார்ப்படுத்திக் கொண்டதாக இவர் சொல்கிறார்.
புற்றுநோய் சிகிச்சை பயணத்தில் அதுவே முக்கியக் கட்டம் என்றும் அந்த நேரத்தில் தம் குடும்பத்தாரும் நண்பர்களும் தமக்கு துணைநின்றதையும் இவர் நினைவுகூர்ந்தார்.
புற்றுநோயைக் கண்டறியும் மருத்துவர், அதை நோயாளியிடம் சொல்லும் தருணம் முக்கியமானது. நிலைமையை ஏற்றுக்கொண்டு சிகிச்சை செய்துகொள்வது வரை ஆதரவு தேவைப்படும். அதை வழங்க சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தில் இணைந்து சேவையாற்றுவதாக திரு எழில் சொல்கிறார்.
“அடுத்த முக்கியக் கட்டம், சிகிச்சை முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது. பணியிடத்தில் பாரபட்சமாக நடத்தப்படலாம் என்கிற பயத்தில் புற்றுநோய் குறித்து பலரும் தங்கள் நிர்வாகத்திடம் தெரியப்படுத்துவதில்லை. இந்தப் பயத்தை போக்க, அவரவர் நிர்வாகம் ஆதரவளிப்பதும் வேலையில் முன்னேறுவதற்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம்,” என்கிறார் திரு எழில்.
சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் செமிகோலன் ஆதரவுக் குழு, நோயாளி குடும்பப் பங்காளித்துவத் திட்டம், பணிக்குத் திரும்புதல் திட்டம், உளவியல் சமூகத் தொண்டு, மறுவாழ்வுச் சேவைகள் உள்ளிட்ட குழுக்களில் இவர் பணியாற்றி வருகிறார்.
இவர் ‘ஆஸ்டோமி அசோசியேஷன் ஆஃப் சிங்கப்பூர்’ எனும் அமைப்பையும் நடத்தி வருகிறார்.
“தற்போது 60வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தின் பணி அளப்பரியது. அதில் நானும் பங்களிப்பது மகிழ்ச்சி,” எனத் திரு எழில் சொல்கிறார்.
“புற்றுநோய்க்கு முன்பு வரை என் குடும்பம், என் வாழ்க்கை என்று பயணித்துக் கொண்டிருந்த நான், தற்போது பிறருக்காக என்னால் இயன்றவற்றை செய்து வருகிறேன். புற்றுநோய் என் வாழ்க்கை மீதான பார்வையை மாற்றியுள்ளது. இப்போது என் வாழ்வுக்கு அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன்,” என்கிறார் இவர்.
ஏப்ரல் 20, 21ஆம் தேதிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போராடியவர்களின் வாழ்வைக் கொண்டாடவும் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூரவும் புற்றுநோய்க்கு எதிராகப் போராடவும் சமூகத்தை ஒன்றுதிரட்டுவதற்காக நடைபெறவுள்ள ‘டாக்மெட் ரிலே ஃபார் லைஃப் 2024’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கிறார் திரு எழில்.