நெல்லை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஜெயக்குமார் தனசிங் அண்மையில் மாயமானார். பின்னர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரிக்க காவல்துறை எட்டு தனிப்படைகளை அமைத்துள்ளது.
இந்நிலையில் ஜெயக்குமார் எழுதியதாகக் கூறப்படும் இரண்டு கடிதங்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
அதில் பல்வேறு பண விவகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தம்மிடம் தேர்தலுக்காக 11 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும் பின்னர் அத்தொகையை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறிவிட்டதாகவும் ஜெயக்குமார் எழுதியதாகக் கருதப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறை விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை நேரில் முன்னிலையானார் தங்கபாலு.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டது முற்றிலும் பொய்யான ஒரு தகவல் என்றார். இது குறித்து தம்மிடம் நடைபெற்ற விசாரணையின்போது தெளிவாகக் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.
“காவல்துறை விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது.
“விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும், உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்தும் அதுதான்,” என்றார் தங்கபாலு.