புதுடெல்லி: இலவசத் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
“இந்தியா போன்ற நாடுகள், நலிந்த நிலையில் உள்ள மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலவசத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. ஆனால், அந்தத் திட்டங்களின் செலவினங்கள் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவது அரசின் கடமை,” என அவர் கூறினார்.
அதேபோல், இலவசத் திட்ட அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என்றும் சில மாநிலங்கள் இலவசத் திட்டங்களை அறிவித்து நிதி ஒழுங்கை கடைப்பிடிக்கத் தவறுகின்றன என்றும் திரு சுப்பாராவ் தெரிவித்தார்.
“எனவே இலவசத் திட்டங்கள் தொடர்பாக பரந்த விவாதம் தேவை. இந்தத் திட்டங்களுக்கு செலவழிப்பதால் என்ன பலன் கிடைக்கும், இந்தப் பணத்தை வேறு திட்டங்களுக்கு செலவிட முடியுமா என்று சிந்திக்க வேண்டும். எனவே, மத்திய அரசு இலவசத் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.