சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தற்போது 1.16 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் மாநிலத்தில் உள்ள 1.60 கோடி மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வை காலஞ்சென்ற முதல்வர்களான மு.கருணாநிதியும் ஜெ.ஜெயலலிதாவும் ஏற்கவில்லை. ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகே தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இலவசப் பேருந்து திட்டத்தின்கீழ் 450 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைதான் அத்திட்டத்தின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது.
புதுமைப் பெண் திட்டம் மூலம் வழங்கப்படும் கல்வி ஊக்கத் தொகையால் 3.5 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். மாணவர்களும் அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரிக்குச் சென்றால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள 18 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.