கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், எம்எல்ஏவின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநில தீயணைப்பு, அவசர சேவைகள் அமைச்சர் சுஜித் போஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபாஸ் ராய், முன்னாள் நகராட்சித் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் லேக் டவுன் பகுதியில் உள்ள சுஜித் போஸின் இரண்டு வீடுகள், பிபி கங்குலி தெருவில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் ராயின் வீடு, சுபோத் சக்ரவர்த்தியின் வீடுகளிலும் மத்தியப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிமையியல் அமைப்புகளில் ஆட்சேர்ப்பு தொடர்பாக திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த மூன்று தலைவர்களின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.