புதுடெல்லி: டெல்லியின் திலக் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகே, இளம் பெண்ணின் உடல் ஒன்றைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை மீட்டனர்.
30 வயதுடைய அந்த பெண் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெண்ணின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் உள்ளன. அவருடைய கண்கள் பிதுங்கிய நிலையில் காணப்பட்டன. இதனால், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
பெண்ணின் கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தன.
மாண்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குர்பிரீத் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணைத் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.