புதுடெல்லி: இந்திய இளையர்களின் மேம்பாட்டுக்காக ‘மேரா யுவ பாரத்’ (எம்ஒய் பாரத்) என்ற பெயரில் தன்னாட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி இந்த அமைப்பு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.
புதிய அமைப்பு, அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதன் மூலம் இளையர்களின் ஆற்றலை நாட்டின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்த முயற்சி செய்யும் என்றார் அவர்.
தூய்மை இந்தியா போன்ற அரசின் பல்வேறு திட்டங்களிலும் ‘கோ-வின்’, ‘ஆரோக்கிய சேது’ போன்ற செயலிகள் உருவாக்கத்திலும் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் முகக்கவசம் உருவாக்குவதிலும் இளையர்கள் முன்னணியில் இருந்தனர் என்பதைச் சுட்டிய அமைச்சர், அவர்களிடையே நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வை ஏற்படுத்துவதே புதிய அமைப்பின் நோக்கம் என்றார்.
இந்தியாவைத் தற்சார்பு நாடாக மாற்ற ‘மேரா யுவ பாரத்’ அமைப்பின் மூலம் இளையர்கள் இணைந்து செயல்படுவார்கள்.
கல்வி, அனுபவக் கற்றல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் இளையர்கள் வாய்ப்புகளைத் தேடுவதற்கும் இணைந்து செயல்படுவதற்கும் இது ஒரு தளமாக இருக்கும்.
அனுபவக் கற்றல் மூலம் இளையர்களின் தலைமைத்துவ வளர்ச்சிக்கு இந்த அமைப்பு வழிவகுக்கும்.
இளையர்களின் விருப்பங்களுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கு இந்த அமைப்பு வழிவகுக்கும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இளையர்களின் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளையர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.