புதுடெல்லி: இந்தியாவின் 77வது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் 10வது முறையாக பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.
அதையடுத்து தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு திரு மோடி உரையாற்றினார்.
இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 26 முதல் செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 10,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் பாஜக அரசு மேற்கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து தமது உரையில் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. 30 வயதுக்கும் குறைவான இளையர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இன்றைய செயல்களின் தாக்கம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். தற்போது நாங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றமோ, பாதை விலகலோ இல்லை,” என்று பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.