திருவனந்தபுரம்: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் பாம்பைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, கைப்பேசியில் படமெடுக்கும்படி சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூர் அருகே வாலப்பட்டணத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நிகழ்ந்தது.
போதையில் இருந்த அந்த ஆடவர், அந்த மலைப்பாம்புடன் தம்மைப் படமெடுக்கும்படி அந்த எரிபொருள் நிலைய ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விவரித்த அபிஷேக் என்ற ஊழியர், “சந்திரன் என்ற அம்மனிதர் கழுத்தில் மலைப்பாம்பைப் போட்டபடி எங்களிடம் படமெடுக்கச் சொன்னார். போதையில் இருந்ததால் என்ன செய்கிறோம் என்பதை அவர் உணராமல் இருந்திருக்கலாம்.
“சிறிது நேரத்தில் அந்த மலைப்பாம்பு சந்திரனின் கழுத்தைச் சுற்றியதால் அவர் நிலை தடுமாறி விழுந்தார்,” என்று விவரித்தார்.
“இதற்குமுன் நான் பாம்பை எதிர்கொண்டதில்லை. ஆனாலும், சந்திரன் போராடியதைக் கண்டதும் விரைந்தோடி ஒரு சாக்குப்பையை எடுத்துக்கொண்டு, அவரை நோக்கி ஓடினேன். மிகவும் போராடி, அப்பாம்பின் வாலைப் பிடித்து இழுத்தேன். ஒருவழியாக சந்திரனின் கழுத்தைப் பற்றியிருந்த பாம்பின் பிடி தளர்ந்தது,” என்றார் அபிஷேக்.
முதலில் அஞ்சியபோதும் ஒருவர் உயிருக்குப் போராடியதைக் கண்டதும் துணிச்சலுடன் அவரைக் காப்பாற்ற முயன்றதாக அபிஷேக் கூறியதாக, ஐஏஎன்எஸ் செய்தி தெரிவித்தது.