சிட்னி: ஆஸ்திரேலியாவின் வடக்கு குயீன்ஸ்லாந்தில் ஓர் ஆடவரின் காலில் பாம்பு சுற்றிக் கொண்டது. அந்த ஆடவரைக் காப்பாற்றுவதற்காக அவருடைய நண்பர் பாம்பைப் பிடித்து இழுத்தார்.
அப்போது அந்த ஆடவரை பல முறை பாம்பு கடித்துவிட்டது என்று ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு ஆடவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. என்றாலும் பாம்பால் கடிபட்டவருக்கு வயது 69 என்றும் மற்றவருக்கு வயது 65 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தச் சம்பவம் சனிக்கிழமை எப்படி நிகழ்ந்தது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
அந்த இருவரும் கோமளா என்ற நகரில் உள்ள கோமளா அரசாங்கப் பள்ளி என்ற பள்ளிக்கூடத்தின் 100வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது இருவரையுமே பாம்பு கடித்துவிட்டது.
அந்த இருவருக்கும் குயீன்ஸ்லாந்து மருத்துவ வாகனச் சேவைப் பிரிவினர் சிகிச்சை அளித்தனர்.
ஒருவரை மருத்துவர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர். மற்றொருவரை காப்பாற்ற 30 நிமிடம் போராடினர்.
அவரைக் காப்பாற்ற நச்சுமுறிவு மருந்துடன் மருத்துவர்கள் விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாக அவர் உயிர் போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.