கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘குரங்கு பெடல்’ திரைப்படம். மிக விரைவில் இப்படத்தை தனது நிறுவனம் சார்பாக தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
முழுப்படத்தையும் பார்த்த பிறகு இயக்குநரையும் அவரது குழுவினரையும் வெகுவாகப் பாராட்டினாராம் சிவா.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியீடு கண்ட ‘மதுபானக்கடை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கமலக்கண்ணன்.
பின்னர் அவர் இயக்கிய ‘வட்டம்’ என்ற படம் பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில் தனது மூன்றாவது படைப்புடன் அவர் களம் இறங்கியுள்ளார்.
ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறு கதையை தழுவி உருவாகியுள்ளது ‘குரங்கு பெடல்’.
இதில், காளி வெங்கட், சந்தோஷ், வேல் முருகன், ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
“மிதிவண்டி ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பை அலசும் படம் இது. கடந்த 1980, 1990களில் சிறுவர்கள் எப்படியாவது மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியோடு வலம் வருவர்.
“இப்படம் காவிரிக் கரையோரம் அமைந்துள்ள கத்தேரி என்ற கற்பனை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
“இந்த காலத்தில் மூன்று வயது குழந்தைகள்கூட ஓட்டக்கூடிய அளவுக்கு புது வடிவங்களில் மிதிவண்டிகள் வந்துவிட்டன. அதனால் முன்பு போல் பெரிய மிதி வண்டிகளை அரை பெடல் போட்டு ஓட்டும் அனுபவம் சிறார்களுக்குக் கிடைப்பதில்லை.
“பொதுவாக பொம்மைகளுக்கு அடுத்தபடியாக நம் குழந்தைகளை கவர்வது மிதிவண்டிதான். அதிலும் 1980களைச் சேர்ந்த சிறார்களுக்கு சைக்கிள் ஓட்டுவதும் அதைச் சொந்தமாக வாங்குவதும் பெரும் கனவாக இருந்தது. அந்தக் கனவை இந்தப் படம் விவரிக்கும்.
“முழுப்படத்தையும் பார்க்க விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். படம் பார்த்த பின் அவரே அதை வெளியிட முன்வந்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.