கோவாவில் நடைபெறும் 53வது அனைத்துலக திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களான 'ஜெய்பீம்', 'குரங்கு பெடல்', 'கிடா' ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டு விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.
சமந்தா நடித்திருக்கும் 'யசோதா' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சுவரொட்டியை சமந்தா தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
'காந்தாரா' படத்தைப் பார்த்துவிட்டு "தெரிந்ததைவிட தெரியாதது அதிகம். இதைவிடச் சிறப்பாக யாராலும் சினிமாவில் சொல்ல முடியாது. எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் தலைசிறந்த படைப்பைக் கொடுத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்," என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. இந்தப் படம் நவம்பர் 25ஆம் வெளியாக உள்ளதாக சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.