தோக்கியோ: ஜப்பானில் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவுவதாகச் சொல்லப்படும் மருந்து வகைகள் (டயட்ரி சப்ளிமன்ட்ஸ்) தொடர்பிலான விவகாரம் தலைதூக்கியுள்ளது.
அதன் காரணமாக இருவர் மாண்டதாகவும் 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஜப்பானிய அரசாங்கம் புதன்கிழமையன்று (மார்ச் 27) தெரிவித்தது.
சிறுநீரகப் பிரச்சினைக்கு ஆளானதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் கொபாயாஷி மருந்து நிறுவனம் சில ஊட்டச்சத்து மாத்திரைகளை மீட்டுக்கொண்டது. அந்த மாத்திரைகளை மருத்துவர் சான்றிதழின்றி வாங்கலாம்.
அந்த விவகாரத்துக்கும் மாண்ட இருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 100க்கும் அதிகமானோருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘பெனி கோஜி’ உட்பட மூன்று ஊட்டச்சத்து மருந்து வகைகளை கோபாயாஷி நிறுவனம் மீட்டுக்கொண்டது. அவற்றில் ரெட் யீஸ்ட் ரைஸ் எனப்படும் மாவைப் புளிக்க வைக்கும் உணவுப் பொருளைக் கொண்ட சிவப்பு அரிசி உள்ளது.
கொழுப்புச் சத்தைக் குறைக்க ‘ஸ்டாட்டின்’ மருந்துக்குப் பதிலாக ரெட் யீஸ்ட் ரைசை உட்கொள்ளலாம் என்று மருத்துவ ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன. அதேவேளை, அதனுடன் சேர்க்கப்படும் வேதிக் கலவையைப் பொறுத்து அது உடல் உறுப்புகளுக்கு அபாயம் ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“இந்த விவகாரத்துடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் மரணங்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உள்ளது.
“மேலும், இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய 106 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது,” என்று அரசாங்கத்தின் முன்னணி பேச்சாளரான யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் வாயிலாக கோபாயாஷி நிறுவனம் பல்வேறு ஊட்டச்சத்து மருந்து வகைகளை விற்று வருகிறது. தான் தயாரிக்கும் மருந்து வகைகளுக்கும் பாதிக்கப்பட்டோர் எதிர்நோக்கும் உடல்ரீதியான பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று அந்நிறுவனம் கூறியது.