சோல்: தென்கொரியாவில் மருத்துவப் பேராசிரியர்கள், திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் பணியில் தாங்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து பயிற்சி மருத்துவர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மருத்துவப் பேராசிரியர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளனர்.
“மருத்துவப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்துவது மட்டுமின்றி நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறையையும் கவிழச் செய்துவிடும்,” என்று கொரிய மருத்துவப் பேராசிரியர்கள் சங்கத் தலைவர் கிம் சாங் சூ செய்தியாளர்களிடம் கூறினார்.
அவசரகால, கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகள் மீது கவனம் செலுத்த வெளிநோயாளி சிகிச்சையைப் பேராசிரியர்கள் குறைத்துக்கொள்ளத் தொடங்குவர் என்றார் அவர். அதே நேரத்தில், சிலர் தங்களது பணி விலகல் கடிதங்களையும் சமர்ப்பிப்பர்.