சோல்: வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத மருத்துவர்களைக் காக்கும் விதமாக தென் கொரிய அரசாங்கம் அவசர உதவி தொலைபேசி அழைப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சூ கியோ-ஹாங் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களை யாரேனும் அச்சுறுத்தினாலோ அல்லது வேலை நிறுத்தத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தினாலோ அந்த உதவி எண்ணை அவர்கள் அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
சில மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்களை போராட்டத்தில் சேர்ந்துகொள்ள அச்சுறுத்துவதாகப் புகார்கள் வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையில் நெருக்கடி அதிகரிக்காமல் இருப்பதற்காக தென்கொரிய அரசாங்கம் பல்கலைக்கழங்களில் மருத்துவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவித்தது. அதை ஏற்க மறுத்த மருத்துவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிக மாணவர்கள் சேர்ந்தால் கல்வித் தரத்தில் பிரச்சினை வரும் மேலும் வேலையிடத்தில் முன்னேற்றம் இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தென்கொரிய அரசாங்கமும் தனது புதிய திட்டத்தை தற்காத்து பேசி வருகிறது.
மூன்று வாரங்களாகத் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 11ஆம் தேதி நிலவரப்படி 5,500க்கும் அதிகமான தென் கொரிய மருத்துவர்கள் அவர்களது வேலையில் இருந்து விலக கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.