சான் ஃபிரான்சிஸ்கோ: ஓட்டுநரில்லா கார் ஒன்றை, பலரும் சேர்ந்து சேதப்படுத்தியதுடன் அதைத் தீவைத்தும் கொளுத்தினர்.
பிப்ரவரி 10ஆம் தேதியன்று சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சைனாடவுன் பகுதியில் நகர்ந்து சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற வேமோ காரை, அங்குக் கூடியிருந்தோர் கவனித்தனர்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு கூட்டத்தில் பலரும் வாணவேடிக்கை வெடித்துக்கொண்டிருந்தனர்.
பின்னர், ஒருவர் காரின் மேலே தாவி அதன் கண்ணாடியை உடைத்தார். கூட்டத்தில் சிலர் கைதட்டி ஆரவாரம் செய்யவே, மற்றொருவர் அதேபோல் காரின் மேல் தாவினார்.
அதையடுத்து காரை சேதம் செய்வதிலும் கண்ணாடியை உடைப்பதிலும் பலர் ஈடுபட்டனர்.
வாணவேடிக்கையை காரின் உள்ளே ஒருவர் எறிந்ததாகவும் அதையடுத்து கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமெரிக்காவில் ஓட்டுநரில்லா கார்களுக்கு சேதம் விளைவித்த ஆக மோசமான சம்பவம் இது என்று கூறப்படுகிறது.