சான் ஃபிரான்சிஸ்கோ: கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்சை ஓட்டுநரில்லா இரண்டு டாக்சிகள் வழிமறித்துவிட்டதாக சான் ஃபிரான்சிஸ்கோ தீயணைப்புத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்டவர் பின்னர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி, நான்கு சாலைத் தடங்களைக் கொண்ட ஒருவழி தெருவில் வலது பக்கம் உள்ள இரு தடங்களில் ஓட்டுநரில்லா இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக அறிக்கை தெரிவித்தது.
விபத்தில் காயமுற்றவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்படுவதற்கு வழிவிட, வேறொரு தடத்தில் இருந்த காவல்துறை வாகனம் நகர்த்தப்பட வேண்டியிருந்தது.
போக்குவரத்துக்கும் மருத்துவப் பராமரிப்புக்கும் அந்த ஓட்டுநரில்லா வாகனங்கள் இடையூறு விளைவித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து 3.8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸக்கர்பர்க் சான் ஃபிரான்சிஸ்கோ பொது மருத்துவமனைக்குச் சென்ற 20 முதல் 30 நிமிடங்களில் அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குரூஸ், இந்தச் சம்பவத்துக்கு தான் காரணமல்ல என்று கூறியது.