சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாம் காலாண்டாக ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்தது.
அதேவேளை, வேலையில் இருப்போரின் எண்ணிக்கை கூடியது. செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 30) மனிதவள அமைச்சு வெளியிட்ட இவ்வாண்டின் முதல் காலாண்டுக்கான ஊழியர் சந்தை சம்பந்தப்பட்ட முதற்கட்ட புள்ளி விவரங்களின் மூலம் இத்தகவல்கள் தெரியவந்தன.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் வேலையில் இருப்போரின் எண்ணிக்கை 4,900 அதிகரித்ததையும் புள்ளி விவரங்கள் காட்டின. அதற்கு முந்தைய காலாண்டில் பதிவான 7,500ஐக் காட்டிலும் அந்த எண்ணிக்கை குறைவு.
இந்த எண்ணிக்கை, சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் பொருந்தும்.
அதேவேளை, சிங்கப்பூர் குடியுரிமையோ நிரந்தரவாசத் தகுதியோ அல்லாதோரிடையே வேலையில் இருப்போரின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குப் பிறகு முதன்முறையாக குறைந்தது. புதிய ஊழியர்களுக்கான தேவை குறைந்திருப்பது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இது, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான இட ஒதுக்கீட்டில் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டதால் குறிப்பாக கட்டுமானத் துறைக்குப் பொருந்தும்.
வேலையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் 2023ஆம் ஆண்டின் முந்தைய காலாண்டுகளில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. அதோடு, பொருளியல் மந்தம் ஏற்படாத காலகட்டங்களில் பதிவான வளர்ச்சி விகிதத்துக்கும் இவ்வாண்டு முதல் காலாண்டு விகிதத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,000ஆகப் பதிவானது. முந்தைய காலாண்டில் பதிவான 3,460ஐக் காட்டிலும் அந்த எண்ணிக்கை குறைவாகும்.
நிறுவனத்தின் செயல்பாட்டுக் கட்டமைப்பை மாற்றியமைப்பது அல்லது மறுசீரமைப்பது ஆகியவையே முதல் காலாண்டில் தொடர்ந்து ஆட்குறைப்பு இடம்பெற்றதற்கான முக்கியக் காரணங்கள் என்றும் மனிதவள அமைச்சு கூறியது. நிறுவனங்கள் உருமாற்ற நடவடிக்கைகைளை மேற்கொண்டுவரும் சூழலில் இந்நிலை உருவாகியுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
பொருளியல் வளர்ச்சிக்கேற்ப ஊழியர்களுக்கான தேவையும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு சொன்னது.