மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
“சிங்கை நேசன் பத்திரிகையில் 1888ல் சி.கு.மகுதூம் சாயபு வெளியிட்ட உரையாடல் தொகுப்பான ‘வினோத சம்பாஷணை’யை சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என ஆய்வாளர் நா.கோவிந்தசாமி 1989ல் முன்வைத்தார்.
“ஆனால் அந்த ஆய்வின் முடிவைத் திரு பாலபாஸ்கரன் 2009ல் மறுத்தார். பொதுஜன மித்திரனில் 1924, மே 28ஆம் தேதி வெளியான “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற சிறுகதையே சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதை என அவர் கூறியிருந்தார்,” என்றார் சிவானந்தம்.
சமூகச் சிந்தனைகளை வளர்த்த முக்கியச் சிங்கப்பூர்ச் சிறுகதைகளையும் சுட்டினார் சிவானந்தம்.
பின்பு, ‘த சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழின் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான ஷாநவாஸ், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திவரும் கதைக்களத்தின் முதல் அமைப்பாளரும் எழுத்தாளருமான இராம வயிரவன் ஆகியோருடன் கலந்துரையாடலையும் வழிநடத்தினார் சிவானந்தம்.
“மாதத்திற்கு ஒரு சிறுகதை எழுதுவது மிகக் கடினம். ஊர் சிறுகதைகளை ‘சிங்கப்பூர்ப்படுத்த’ வேண்டும். எனினும், ஓர் இதழின் உயிர் என்பது சிறுகதையே,” என்றார் ஷாநவாஸ்.
“கதைக்களம், அதிக எழுத்தாளர்களை உருவாக்கித் தமிழ்நாட்டிலும் பேசப்படுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் இராம வயிரவன்.
“இந்நிகழ்ச்சி புதுமையானது. எனினும், சிறுகதை எழுதும் பயிலரங்குகளோடு ஒப்பிடுகையில் இது இளையர்களைவிடப் பெரியவர்களுக்கே பொருத்தமாக இருந்தது,” என்றார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பிரணாம்பிகா பாஸ்கரன்.
“இந்தச் சிறுகதை நூற்றாண்டைப் பற்றித் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினால் அது இலக்கிய வளர்ச்சியாக இருக்கும்,” என்றார் எழுத்தாளர் ரமா சுரேஷ்.