சிட்னி: ரியோ டின்டோ குழுமம் ஆஸ்திரேலியாவில் சுரங்கங்களிலிருந்து இரும்புத் தாதுப் பொருள்களை பரந்து விரிந்த அந்நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் நிறுவனமாகும்.
உலகிலேயே மிகப் பெரிய, நீளமான, ஓட்டுநரில்லாத் தானியங்கி ரயில் வண்டிகளை அந்நிறுவனம் பயன்படுத்திவருகிறது.
மின்கலத்தினால் இயங்கும் ரயில்களை சோதனை செய்வதற்கு தற்போது ரியோ நிறுவனம் தயாராகிவருகின்றது.
மின்னியக்கத்திற்கு 2.5 கி.மீ. நீளமுள்ள அந்நிறுவனத்தின் ரயில்கள் மாறினால், தற்போது அவை சார்ந்துள்ள டீசல் பயன்பாட்டை பெரிய அளவில் குறைக்க முடியும். இந்த செயல்பாடு, பூமியின் காற்று மண்டலத்தை பாதுகாக்கும் முயற்சியாக அமையும். மேலும், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்தி 2030ம் ஆண்டுக்குள் நேரடியாக ஏற்படும் கரியமில வாயு உமிழ்வை 50 விழுக்காடு குறைக்கும் நாட்டின் திட்டத்திற்கு முக்கியப் பங்களிக்கும்.
ஒவ்வொரு மனித இயந்திர ரயில் வண்டிகளிலும் மூன்று என்ஜின்கள் (இயந்திரங்கள்) இயங்குகின்றன. அவை 240 ரயில் பெட்டிகளை இணைத்துக்கொண்டு ஓட்டுநர் இன்றி செயல்படுகின்றன. மொத்தம் 28,000 டன் எடைகொண்ட, 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரும்புத் தாதுப் பொருட்களை எடுத்துச்செல்லக்கூடியவை இவ்வகை (ராட்சச) ரயில்கள். கடந்த 2018 முதல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பாரா மாகாணத்தின் 1,900 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதையில் ரியோ நிறுவனத்தின் தானியங்கி ரயில்கள் ஓட்டுநர்கள் இல்லாமலேயே சரக்குகளை ஏற்றியும் மாற்றிடங்களுக்கு அனுப்பியும் வருகின்றன.
“வெப்டெக் நிறுவனத்தின் உற்பத்தியாளரும் மேம்பாட்டாளரும் எங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை நாங்கள் சோதிக்காவிட்டால் வேறு யாரும் செய்யப்போவதில்லை. அச்சோதனை வழி நாம் பில்பாராவில் பற்பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்” என்றார் ரியோ நிறுவனத்தின் இரும்பு தாதுப்பொருள், ரயில் மற்றும் துறைமுகச் சேவைகளின் நிர்வாக இயக்குனர் திரு. ரிச்சர்ட் கோஹன்.
2025ல் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பேட்டரியால் இயங்கும் இயந்திரங்களின் சோதனையில் ஓட்டுநர்கள் உடன் இருந்து கண்காணிப்பர். இவ்வகை இயந்திரங்களில் 7.5 மெகவாட் எரிசக்தி இருக்கும். தற்போது உள்ள டீசல் இயந்திரங்களில் 13 மெகவாட் எரிசக்தி பயன்படுகின்றது. அதனை சமன் செய்வதுதான் சோதனையின் சவாலாக உள்ளது.