ஜோகூர் பாரு: ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், 39, மாநிலத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 28ஆம் தேதி, இஸ்தானா புக்கிட் செரீனில் அவரது பதவி நியமன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், ஜனவரி 31ஆம் தேதி மலேசியாவின் 17வது மாமன்னராகப் பொறுப்பேற்கவிருப்பதால் ஜோகூரில் அவரின் ஆட்சிப் பிரதிநிதியாகப் பட்டத்து இளவரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர் அரசவை ஆலோசனை மன்றத் தலைவர் அப்துல் ரஹிம் ரம்லி, இந்த நியமனம் ஜோகூர் மாநில அரசமைப்புச் சட்டம் 1985ன்படி, மன்றத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப இடம்பெறுவதாகக் கூறினார்.
இதற்கு முன்னரும் சுல்தான் தமது நிர்வாகப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்த நேரங்களில் பட்டத்து இளவரசர் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டதுண்டு.
இருப்பினும் தற்போதைய நியமனம், சுல்தான் இப்ராகிம் மலேசியாவின் மாமன்னர் பொறுப்பில் நீடிக்கும் வரை நடப்பில் இருக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நியமனத்தை அடுத்து பட்டத்து இளவரசர் இனி, ஜோகூர் ஆட்சியாளர் என்று அழைக்கப்படுவார். இனி, அரசாங்க விவகாரங்கள் அனைத்திலும் பட்டத்து இளவரசரை இவ்வாறே குறிப்பிட வேண்டும். அரசாங்கக் கடிதங்கள், உரைகள், தொழுகைகள் போன்றவற்றிற்கு இது பொருந்தும்.
பட்டத்து இளவரசர் ஜோகூர் மாநில ஆட்சியாளராக நியமிக்கப்படுவதற்கு ஜோகூர் சுல்தான் ஒப்புதல் அளித்ததாக ஜோகூர் அரசவை ஆலோசனை மன்றத் தலைவர் அப்துல் ரஹிம் ரம்லி தெரிவித்தார்.
துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், 1984ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பிறந்தார். சுல்தான் இப்ராகிமின் ஆறு குழந்தைகளில் இவர் மூத்தவர்.
2014ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி இவர், செ புவான் மக்கோட்டா கலீடா புஸ்டாமாமைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.