சிங்கப்பூரின் அரசியல் தலைவர்களிடம் அறிவுத்திறனும் நிபுணத்துவமும் இருப்பதாகக் கூறிய ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், அவர்களைத் தாம் உயர்வாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நிலவிவரும் உறவு தொடர்ந்து அணுக்கமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், முன்னாள் அம்னோ தகவல் தலைவர் ஷாஹ்ரில் ஹம்டான் ஆகியோரின் வலையொளியில் ஞாயிற்றுக்கிழமையன்று துங்கு இஸ்மாயில் இவ்வாறு கூறினார். தமது மாநிலம் அடைய விரும்பும் நிலையில் சிங்கப்பூர் அரசாங்கம் தற்போது இயங்கி வருகிறது என்றார் அவர்.
“சிங்கப்பூரைச் சேர்ந்த அமைச்சர்களுடனும் வேறு அரசாங்க அதிகாரிகளுடனும் நான் இணைந்து செயல்படும்போது, அவர்களிடம் காணப்படும் அந்தத் தகுதி, அந்த அறிவாற்றல், ஒவ்வொரு அமைப்பிலும் காணப்படும் அந்த நிபுணத்துவத்தைக் கண்டு நான் பொறாமை கொள்கிறேன். ஜோகூரில் அதே நிலையைக் காண விரும்புகிறேன். அவர்களை நான் போட்டியாகக் கருதவில்லை. நான் அடைய விரும்பும் ஒரு தளமாகக் காண்கிறேன்,” என்றார்.
சிங்கப்பூரின் தலைவர்களிடம் காணப்படும் பன்மொழித்தன்மையைப் பாராட்டிய அவர், தாம் மேம்படுத்த விரும்பும் ஓர் அம்சமாக ஜோகூரின் கல்வி அமைப்பைச் சுட்டினார்.
துங்கு இஸ்மாயிலின் தந்தை சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று 17வது மாமன்னராகப் பதவியேற்கும்போது ஜோகூர் மன்னர் பொறுப்பை துங்கு இஸ்மாயில் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.