பேங்காக்: தாய்லாந்தின் நான்தாபூரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, இரண்டு வயது சிறுவனின் உடலைக் குளிர்பதனப் பெட்டியில் மறைத்து வைத்ததாக அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிறுவனின் இறப்பு குறித்து திரு ஹர்னரோங், அவரின் மனைவி மரிசா தோங்-யாம் இருவரும் காவல்துறையிடம் தகவல் கொடுக்கவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
குளிர்பதனப் பெட்டியில் இருந்த சிறுவன் தம்பதியின் மகன் இல்லை. அச்சிறுவனின் பெற்றோர் போதைப்பொருள் புழங்கிகள் என்றும் அதனால் ஹர்னரோங் சிறுவனை வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுவன் உணவு உட்கொள்ளும்போது தொண்டையில் குலைந்தவகை சாதம் அடைத்துக்கொண்டதால் மாண்டதாக தம்பதி காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடற்கூராய்விலும் சிறுவனின் இறப்புக்கு அதுதான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதால் உடற்கூராய்வு முடிவைத் தான் நம்பப்போவதில்லை என்று சிறுவனின் உறவினர் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகளும் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் ஜனவரி 2ஆம் தேதி இறந்ததாகவும் அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் தகவலை வெளியே சொல்லாமல் சடலத்தைக் குளிர்பதனப் பெட்டியில் மறைத்துவைத்ததாக தம்பதியர் கூறினர்.
வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து ஹர்னரோங்கின் பாட்டி ஜனவரி 6ஆம் தேதி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.