புக்கிட் பாத்தோக் வீவக புளோக் ஒன்றில் 43 வயது பெண் இறந்த சம்பவத்தில், அண்டை வீட்டாரைக் கொலை செய்ததாக 65 வயது ஆடவர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.
சனிக்கிழமை காலை 6 மணியளவில், சம்பவ இடத்தில் குழந்தை ஒன்றும் காயத்துடன் காணப்பட்டது.
முற்பகல் 11 மணியளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் உள்ள புளோக் 460பி-யை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றடைந்தபோது குறைந்தபட்சம் நான்கு காவல்துறை வாகனங்கள் அங்கு நின்றிருந்தன.
குற்ற சம்பவ புலன்விசாரணைப் பிரிவைச் சேர்ந்த வேன் ஒன்றும் அவற்றில் அடங்கும். புளோக்கின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டுக்கு இட்டுச் செல்லும் தாழ்வாரத்தில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
சீருடையுடனும் சாதாரண உடையிலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் காணப்பட்டனர்.
முற்பகல் 11.30 மணியளவில், கால் முதல் தலை வரை முழுமையாக மறைக்கப்பட்ட பாதுகாப்பு வெள்ளை உடையுடன் இருந்த சீன ஆடவர் ஒருவர் காவல்துறையின் காருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
புளோக்கின் வெற்றுத்தளத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பு சாதன அறையில், கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வெற்றுத்தளம், பொது நடைபாதை ஆகியவற்றை உள்ளடக்கிய புளோக்கின் சுற்றுவட்டாரம் காவல்துறையால் சுற்றி வளைத்துத் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
உதவி கேட்டு காலை 8.20 மணிக்கு அழைப்பு வந்ததாக ஜனவரி 6ஆம் தேதி பிற்பகல் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்கள் வந்தபோது அந்தப் பெண் வீட்டுக்குள் அசைவின்றிக் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். காலை 8.25 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படைக்கு அறிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் மகனான, ஐந்து வயதுச் சிறுவன் காயங்களுக்காக சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அவர்களின் அண்டை வீட்டுக்காரரான அந்த ஆடவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட ஆடவர் இரைச்சல் தொடர்பாக அந்தப் பெண்ணிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்ததாக, பெயர் குறிப்பிட விரும்பாத அண்டை வீட்டுக்காரர் ஒருவர் ஜனவரி 6ஆம் தேதி ஊடகங்களிடம் தெரிவித்தார். இதற்கு முன்னர் பல முறை காவல்துறையினர் அந்த வீட்டுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
பிற்பகல் 2.15 மணியளவில், சாதாரண உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் புளோக்கின் குப்பைக் கிடங்கை உலோகக் கம்பி கொண்டு ஆய்வு செய்வதைக் காண முடிந்தது. இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கத்தி கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
நீதிமன்றத்தில் அந்த ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
“இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குறிப்பாக காயமடைந்த குழந்தைக்கு எனது பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று ஹொங் கா நார்த் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏமி கோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை நானும் எனது அடித்தள அமைப்பினரும் (குழு) கண்டறிவோம். தேவையான ஆதரவை வழங்குவோம்,” என்றார் அவர்.
இரைச்சல் குறித்து அண்டை வீட்டாருக்கு இடையிலான வாதங்கள் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் செய்யப்படும் அத்தகைய புகார்களின் மாதாந்திர சராசரி 2019இல் 400 ஆக இருந்தது, 2021இல் 3,200 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2022ல் 2,300க்குக் குறைந்தது.
2023ஆம் ஆண்டின் சட்ட அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது, அண்டை வீட்டார்களுக்கிடையிலான இரைச்சல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சமரசப் பேச்சை கட்டாயமாக்குவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.