வாஷிங்டன்: உக்ரேனுக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.2 பில்லியன்) நிதியுதவி வழங்க அனைத்துலகப் பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதியம், அதன் 15.6 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்திலிருந்து இந்த நிதியை வழங்குகிறது.
உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியை அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் திருவாட்டி கிறிஸ்டலினா ஜார்ஜிவா சந்திப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நிதியுதவி பற்றி அறிவிக்கப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள ஐஎம்எஃப் தலைமையகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த சந்திப்பில் ஒரு நாட்டைத் தவிர உக்ரேனுக்கு ஐஎம்எஃப் நிர்வாக சபை ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக ஸெலன்ஸ்கியிடம் திருவாட்டி ஜார்ஜிவா தெரிவித்தார். அந்த நாடு ரஷ்யா என்பது தெளிவாகத் தெரிந்தது.
2023 முற்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட நான்கு ஆண்டு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி கடனில் கியவ்வின் முன்னேற்றம் குறித்து இரண்டாவது முறையாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து நவம்பரில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு நிர்வாக சபை அங்கீகாரம் வழங்கியது.
அமெரிக்க டாலர் 900 மில்லியன் நிதியுடன் சேர்த்து உக்ரேனுக்கு இவ்வாண்டு ஐஎம்எஃப் வழங்கிய மொத்த கடனின் மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்.
“நீட்டிக்கப்பட்ட நிதி வசதி, அதிகாரிகளின் பொருளியல் திட்டத்திற்கு ஒரு வலுவான ஆதாரத்தை வழங்குகிறது,” என்று ஐஎம்எஃப் அறிக்கை குறிப்பிட்டது.
பிப்ரவரி 2022ல் ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அது ஏற்படுத்திய ‘பெரிய அளவிலான சமூக மற்றும் பொருளியல் செலவுகளை’ எதிர்கொண்டாலும் உக்ரேனின் பொருளியல் மீள்தன்மை கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்று திருவாட்டி ஜார்ஜிவா குறிப்பிட்டார்.
“இந்த பொருளியல் மீட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடர்பான நிச்சயமற்ற சூழ்நிலையால் எதிர்காலம் குறிப்பிடத்தக்க அபாயங்களைக் கொண்டுள்ளது. அதே வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் சலுகை அடிப்படையில் வெளிப்புற நிதியுதவி தொடர்வது மிக முக்கியம்,” என்று அவர் கூறினார்.
வாஷிங்டனில் உள்ள உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான தனது போராட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்வதை கியவ் உறுதிப்படுத்த விரும்புகிறது.
போர் தொடங்கியதில் இருந்து உக்ரேன் 68.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவைப் பெற்றுள்ளது என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் அரசாங்கம் 2024ல் சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை எதிர்பார்க்கிறது. இதனை மேற்கத்திய நட்பு நாடுகளின் நிதி உதவி, உள்நாட்டு கடன் மூலம் ஈடுகட்ட உக்ரேன் திட்டமிட்டுள்ளது.