வாஷிங்டன்: உக்ரேனுக்கு நீண்டகால உதவி வழங்க புதிய $600 மில்லியன் டாலர் திட்டத்தை பெண்டகன் வியாழக்கிழமை அறிவித்தது. இது பல்வேறு வகையான ஆயுதங்களுக்கும் கருவிகளுக்கும் நிதியளிக்கப் பயன்படும்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உக்ரேனுக்கு வருகை மேற்கொண்டு, ராணுவ, மனிதாபிமான உதவிக்கு ஒரு பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்த மறுநாள் புதிய உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் பாதுகாப்பு உதவித் திட்டத்தின்மூலம் புதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பெண்டகன் தெரிவித்தது. இத்திட்டம், தற்காப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் அல்லது மாற்றியமைக்கும் ஆயுதங்களுக்கான நீண்டகால ஒப்பந்தங்களுக்கு நிதி வழங்குகிறது.
உக்ரேனின் ஆகாயத் தற்காப்புக்குத் தேவையான கருவிகள், பீரங்கி குண்டுகள், மின்னியல் போர்ச் சாதனங்கள், அழிவு ஆயுதங்கள், கண்ணிவெடி அகற்றும் கருவிகள், பயிற்சி, பராமரிப்பு போன்ற செலவுகளுக்குப் புதிய நிதி உதவும்.
அமெரிக்கா இவ்வாரம் அறிவித்த உதவி நிதி, காங்கிரஸ் ஏற்கெனவே அங்கீகாரமளித்த பணத்திலிருந்து பெறப்படும். அதிபர் ஜோ பைடன், 2023ன் கடைசி மாதங்களில் உக்ரேனுக்கு ராணுவ, மனிதாபிமான உதவி வழங்க மேலும் 21 பில்லியன் டாலர் கேட்டிருக்கிறார். இதற்கு காங்கிரஸ் அங்கீகாரம் அளிக்குமா என்பது தெரியவில்லை.