வாஷிங்டன்: பொதுவாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள விலங்குத் தோட்டத்தில் பாண்டா கரடிகள் பரவலாகக் காணப்படும். ‘ஏஷிய டிரெய்ல்’ எனும் 50 மில்லியன் டாலர் (68.6 மில்லியன் வெள்ளி) செலவில் அமைக்கப்பட்ட அந்த விலங்குத் தோட்டத்தின் பகுதியில் மூன்று பாண்டாக்கள் இருக்கும்.
சட்டைகள், தொப்பிகள் உள்ளிட்டவற்றில் இந்த பாண்டா கரடிகளின் படங்கள் இருக்கும். பாண்டாக்களின் ஒவ்வொரு செயலையும் படமெடுத்துக் காட்ட 24 மணிநேரத்துக்கு இயங்கும் காண்காணிப்பு கேமராக்களும் வாஷிங்டன் விலங்குத் தோட்டத்தில் உண்டு.
எனினும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாண்டாக்கள் விடைபெறவுள்ளன. அது நிரந்தரப் பிரியாவிடையாகக்கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குள் வாஷிங்டன் விலங்குத் தோட்டத்தின் மூன்று பாண்டாக்களும் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளன. சீனாவின் வனவிலங்கு அமைப்புடனான மூன்றாண்டு ஒப்பந்தம் டிசம்பர் மாதம் நிறைவடைவது இதற்குக் காரணம்.
அட்லான்டா, சான் டியேகோ, மெம்ஃபிஸ் ஆகிய அமெரிக்க நகரங்களில் இருக்கும் விலங்குத் தோட்டங்களிலும் பாண்டா கரடிகள் இருந்து வந்துள்ளன. அவற்றிலும் 2024ஆம் ஆண்டிறுதிக்குள் பாண்டாக்கள் இருக்காது.
அந்த மூன்று நகரங்களில் இருக்கும் பாண்டாக்களில் சில ஏற்கெனவே சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. எஞ்சிய பாண்டாக்கள் 2024ஆம் ஆண்டிறுதிக்குள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் அரசியல் இருப்பதை சீனாவும் அமெரிக்காவும் இதுவரை மறுத்து வந்துள்ளன. எனினும், பாண்டா அரசதந்திரம் (பாண்டா டிப்ளாமசி) என்றழைக்கப்படும் அணுகுமுறையைப் பயன்படுத்தி சீனா உதவி நாடியிருப்பதுடன் பங்காளிகளுக்கு வெகுமானம் அளித்து எதிரிகளைத் தண்டித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு அண்மைக் காலமாக வரலாறு காணாத அளவில் மோசமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் பாண்டாக்கள் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன.