சிங்கப்பூரின் முதல் ராட்சத பாண்டா கரடி கூடிய விரைவில் அதன் தாயார் ஜியா ஜியாவிடமிருந்து பிரிக்கப்பட்டுச் சொந்தமாக வாழும் என்று மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்தது.
‘லெ லெ’வின் இரண்டாம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அந்த அறிவிப்பு வந்தது.
அது சுயேச்சையாக வாழும் அறிகுறிகளை வெளிப்படுத்துவதாகவும் அதன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அதனைத் தயார்ப்படுத்த பாண்டா பராமரிப்புக் குழு சீன நிபுணர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் குழுமம் தெரிவித்தது.
‘லெ லெ’ சுமார் இரண்டு வயதானதும் சுயேச்சையாகச் செயல்படும்போது அது சீனாவுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் என்று குழுமம் இதற்கு முன்னர் கூறியிருந்தது.
இது தொடர்பான மேல் விவரங்கள் பின்னொரு தேதியில் வெளியிடப்படும் என்று குழுமம் தெரிவித்தது.
ஜியா ஜியா இல்லாமல் ‘லெ லெ’ தனியாகச் சாப்பிடுவதாகவும், இளைப்பாறுவதாகவும், விளையாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வரும் மாதங்களில் ‘லெ லெ’, தாயார் ஜியா ஜியாவிடமிருந்து முழுமையாகப் பிரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.