இனம், சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் பேதங்களைத் தூண்டுவோரின் நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் (படம்) எச்சரித்துள்ளார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழி நடத்தவும் அவர் உறுதியளித்தார்.
இருப்பினும் நாளை நடைபெறவிருக்கும் பேரணியைத் தடைசெய்வது குறித்துத் திரு அன்வார் ஏதும் கருத்துரைக்கவில்லை.
மலாய்க்காரர்கள் ஒடுக்கப்படுவதாகச் சொல்லும் சில குழுக்கள், தலைநகர் கோலாலம்பூரில் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
“அனைவரையும் உள்ளடக்கிய நாடு என்று நம்மைப் பற்றிச் சொல்கிறோம். எனவே பொறுப்பற்ற அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள இயலாது,” என்று கூறிய பிரதமர் அன்வார், மலேசியா அமைதியான நாடாக இருக்கவேண்டியது முக்கியம் என்றார்.
சட்டம் ஒழுங்கு பின்பற்றப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இதர இனத்தினர் சேர்ந்தே மலேசியாவை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையை ஒருபோதும் விட்டுத்தர இயலாது,” என்றார் அவர்.
நாட்டில் இனம் அல்லது சமயத்தின் அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டும் சக்திகளுக்கு அனுமதி இல்லை என்று மலேசியப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பு அமைப்புகளை விழிப்பு நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அச்சுறுத்தலுக்கு ஆளானதாகத் தங்களைக் கருதிக்கொள்வோர் இன, சமய ரீதியிலான உணர்வுகளைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட முனைவர். இதன் விளைவுகள் ஏழை, எளிய மக்களையே அதிகம் பாதிக்கும்,” என்று திரு அன்வார் சொன்னார்.
நாளை நடைபெறவிருக்கும் பேரணியில் முக்கிய உரையாற்றுவோரில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதும் ஒருவர்.
மலாய்க்காரர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து அதில் கலந்துரையாடப்படும் என்று ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
மலேசியாவின் இளையர், விளையாட்டுத் துறையின்கீழ் செயல்படும் ‘இம்பேக்ட் மலேசியா’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்று பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது குறித்தும் திரு அன்வார் கருத்துரைத்தார்.
கருத்து வேற்றுமை எதுவாயினும் அதைப் பேசித் தீர்த்துக்கொள்வதே சரியான வழி என்றார் அவர். அந்த நிகழ்ச்சி, முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ய அரசாங்கம் செய்யும் முயற்சிகளின் ஓர் அங்கம் என்ற விமர்சனம் எழுந்தது.
மலேசியாவில் இஸ்லாம் அல்லாத மற்ற சமயங்களைச் சார்ந்தோர் அவரவர்க்கு விருப்பமான சமயங்களைப் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
கருத்து வேற்றுமை ஏற்பட்டால் தவறான ஊகங்களையும் தவறான எண்ணங்களையும் தவிர்த்து, சுமுகமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசிய இளையர், விளையாட்டுத் துறை சமயங்களுக்கு இடையிலான புரிதலையும் மரியாதையையும் ஊக்குவிக்கும் நோக்கில் ‘ஜோம் ஸியாரா’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதன்கீழ் பல்வேறு சமயங்களின் வழிபாட்டுத் தலங்களை நேரில் சென்று காண ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முஸ்லிம்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெளிவுபடுத்தினார்.
அந்நிகழ்ச்சி அனைவரையும் உள்ளடக்குதலை நோக்கமாகக் கொண்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.