கோலாலம்பூர்: மலேசியாவின் ஆறு மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகம்மதுவும் முகைதீன் யாசினும் சேர்ந்து களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், இந்தக் கூட்டணியால் பக்கத்தான் ஹரப்பான் (பிஹெச்), பாரிசான் நேஷனல் (பிஎன்) அணிக்குப் பாதிப்பு இருக்காது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரும் முகைதீனும் சந்தித்தது ஒன்றும் புதிதல்ல என்று செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவராக முகைதீன் இருக்கிறார்.
‘‘அந்தக் குழுமம் சதித்திட்டம் போட்டு தங்கள் வழிகளையும் தங்கள் சொத்துகளையும் தற்காத்துக்கொள்ள திட்டமிடும்.
‘‘ஆகையால், நாட்டைக் காப்பாற்ற பொறுப்புள்ளவர்களாக உணர்ந்து நாங்கள் செயல்படுகிறோம்,’’ என்று செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
டாக்டர் மகாதீருடன் கூடிய தனது சந்திப்பின்போது மலாய் மக்களின் எதிர்காலம் பற்றியும் அவர்களுடைய நிலை என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக புதன்கிழமை முகைதீன் தெரிவித்து இருந்தார்.
தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் அணிக்கு டாக்டர் மகாதீரின் ஆதரவு குறித்தும் அப்போது பேசப்பட்டது என்றாரவர்.
கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
அந்தத் தேர்தல்களில் மலேசிய சீனர் சங்கம் (எம்சிஏ), மலேசிய இந்தியர் காங்கிரஸ் (எம்ஐசி) ஆகியவற்றின் தலைவர்கள் தம்மிடம் ஒரு தகவலைத் தெரிவித்து இருப்பதாகவும் வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அந்தக் கட்சிகள் முடிவு செய்து இருப்பதாகவும் பிரதமர் அன்வார் வியாழக்கிழமை தெரிவித்து இருந்தார்.
அந்தக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் தங்களுக்கு அவர்கள் ஆதரவு வழங்கி இருப்பதாகவும் இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டு இருந்தார்.
பக்கத்தான் ஹரப்பான், பாரிசான் நேஷனல் இரண்டும் ஒத்துழைப்பு உடன்பாட்டு அடிப்படையில் சேர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, பாரிசான் நேஷனல் தரப்பு தலைவர் அகம்மது சாஹித் ஹமிடி, தன்னுடைய அணியில் சேர்ந்துள்ள இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்து இருக்கும் முடிவை ஆதரிப்பதாக அறிவித்தார்.
பாரிசான் நேஷனல் தலைவர் என்ற முறையில் அந்த இரண்டு கட்சிகளின் முடிவை நான் பெரிதும் மதிக்கிறேன். நாங்கள் அந்த இரண்டு கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி இருந்தோம்.
ஆனால், போட்டியிடப்போவதில்லை என்று எம்சிஏவும் எம்ஐசியும் முடிவு செய்திருக்கும் பட்சத்தில் அது பற்றி நாங்கள் விவாதிப்போம் என்று திரு ஹமிடி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
பாரிசான் நேஷனல் உச்சநிலை மன்றக் கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது. அதில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமரான ஹமிடி கூறினார்.
மாநிலத் தேர்தல்களில் ஐக்கிய அரசுக்கு ஆதரவாக எம்சிஏவும் எம்ஐசியும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.