கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியிடம் தோற்று வெளியேறியதை அடுத்து, பாகிஸ்தான் அணி வீரர்கள் இருவர் மோதிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் இலங்கை அணிக்கெதிரான ‘சூப்பர் 4’ சுற்றுப் போட்டியில் கடைசிப் பந்தில் தோற்றதையடுத்து, பாகிஸ்தான் அணியின் இறுதிச்சுற்றுக் கனவு தவிடுபொடியானது.
போட்டி முடிந்தபின், மூத்த வீரர்கள் சிலரது செயல்பாடு குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் ஆசம் தமது மனக்குறையை வெளிப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது, நன்றாக விளையாடியவர்களைப் பாராட்டலாமே என்று இளம் வீரர் ஷகீன் ஷா அஃப்ரிடி கூறினாராம்.
தாம் பேசியபோது அஃப்ரிடி இடைமறித்தது பாபருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது என்றும் கூறப்பட்டது.
அப்போது, விக்கெட் காப்பாளர் முகம்மது ரிஸ்வான் குறுக்கிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாக்கா அஷ்ரஃப் ஒரு குழுவை அமைத்துள்ளார்.