செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 416 ஓட்டங்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரிகள், 13 சிக்சர்கள் உள்பட 174 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 417 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 252 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 400 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெடில் அதிக முறை 400 ஓட்டங்கள் குவித்த அணி என்ற இந்தியாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்க அணி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அடித்த 400 ஓட்டங்களையும் சேர்த்து ஏழாவது முறையாக 400 ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி ஆறு முறை 400 ஓட்டங்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.