ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 2019ஆம் ஆண்டு கையில் கத்தியேந்தியபடி ஓர் ஆடவரைக் கத்தியால் குத்திய குத்திய 32 வயது நபருக்குக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சண்டை மூண்டபோது குற்றவாளியான டான் சென் யாங் மட்டும்தான் ஆயுதம் வைத்திருந்தார். மேலும் அறுவருடன் அவர் சம்பவ இடத்தில் காணப்பட்டார்.
டான், திரு சத்தீஷ் நோவெல் கோபிடாஸ் எனும் 31 வயது ஆடவரை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி காலை 6.25 மணியளவில் கொன்றது வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) உயர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
டானின் வழக்கறிஞர்கள் விட்டுக்கொடுக்காமல் வாதிட்டபோதும் அவர் குற்றம் புரிந்ததை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெள்ளத் தெளிவாக நிரூபித்ததாக நீதிபதி எய்டிட் அப்துல்லா கூறினார்.
கொலை செய்யப்பட்ட நபரின் கழுத்தில் கத்திக்குத்துக் காயம் இருந்தது. அவர் இறக்கக் காரணமாக இருந்த அந்தக் காயத்தை டான்தான் ஏற்படுத்தினாரா என்ற ஐயம் இருந்ததாக அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். நீதிபதி அந்த வாதங்களை மறுத்தார்.
சம்பவத்தின்போது டானுடன் இருந்தோரில் ஒருவரான திரு சான் ஜியா சிங் என்பவரின் கையில் ஒரு கறுப்பு நிறப் பொருள் இருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியில் தெரிந்தது என்று டானின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனால் அப்பொருள் அநேகமாக ஒரு மின்சிகரெட்டாக இருந்திருக்கும் என்று நீதிபதி சுட்டினார்.
ஒரு கட்டத்தில் திரு சான் அப்பொருளைத் தனது வாய்க்கு அருகே கொண்டு சென்றது தெரிந்ததென்றும் நீதிபதி குறிப்பிட்டார்.