ஸ்ரீ நாராயண மிஷன், 270 படுக்கைகள் கொண்ட அதன் மூன்றாவது தாதிமை இல்லத்தை ஏற்று நடத்த சுகாதார அமைச்சு ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ளது.
நீ சூன் குழுத்தொகுதியில் அமையவிருக்கும் புதிய குடியிருப்புப் பகுதியான லோரோங் செஞ்சாருவில் இந்தப் புதிய இல்லம் 2028ஆம் ஆண்டுக்குள் செயல்படும்.
ஸ்ரீ நாராயண மிஷன் தற்போது சொங் பாங் வட்டாரத்தில் 224 படுக்கைகள் கொண்ட தாதிமை இல்லத்தை நடத்தி வருகிறது. இந்த எண்ணிக்கை நான்கு ஆண்டுகளுக்குள் 832ஆக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஒன்பது ஆண்டு ஒப்பந்தத்தில் ஸ்ரீ நாராயண மிஷன் 302 படுக்கைகள் கொண்ட அதன் இரண்டாவது தாதிமை இல்லத்தையும் ஈசூன் வட்டாரத்தில் அமைந்துள்ள ரிவர்வாக் வளாகத்தில் நடத்தவுள்ளது.
அந்த இல்லம் 2026ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீ நாராயண மிஷன் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து மூத்தோருக்கு பலதரப்பட்ட தாதிமை சேவைகளை அது வழங்கி வருகிறது.
சிங்கப்பூரில் முதியோர் நலன் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த விரிவாக்கம் பெரிதளவில் கைகொடுக்கும்.
“மூத்தோருக்கு சிறப்பான பராமரிப்புச் சேவைகளை எங்களால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து, மூன்றாவது தாதிமை இல்லத்தை நடத்த எங்களுக்கு சுகாதார அமைச்சு வாய்ப்பு வழங்கியதில் நான் நன்றியுணர்வு கொள்கிறேன்.
“ஸ்ரீ நாராயண மிஷன் பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது,” என்று ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.தேவேந்திரன் தெரிவித்தார்.