தனது காதலி மற்ற ஆண்களுடன் உறவுகொண்டதால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கத் தொடங்கியதை திருமணமான ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.
பின்னர் அந்த ஆடவர் காதலியை அதிகமாகத் தாக்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் அப்பெண் உயிரிழக்க நேரிட்டது.
நோக்கமின்றி மரணம் விளைவித்த செயலில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை எம். கிருஷ்ணன் எனும் 40 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரரான அவர் பலமுறை தாக்கிய மல்லிகா பேகம் ரஹமன்சா அப்துல் ரஹ்மான் எனும் மாது தலையில் காயம் ஏற்பட்டதால் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
கிருஷ்ணன், 2015ஆம் ஆண்டில் திருவாட்டி மல்லிகாவைப் பார்த்ததாகவும் பின்னர் இருவரும் காதலித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தது.
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தானும் திருவாட்டி மல்லிகாவும் வீட்டில் ஒன்றாக இருந்ததைப் பார்த்த மனைவியை கிருஷ்ணன் தாக்கியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து மனைவி, கிருஷ்ணனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தனிநபர் பாதுகாப்பு ஆணையைப் பெற்றார். இருவரும் இன்னமும் மணமுடித்த தம்பதியாக இருக்கின்றனர்.
திருவாட்டி மல்லிகா இறக்கும் வரை அவரும் கிருஷ்ணனும் காதலர்களாக இருந்தனர். 2017ஆம் ஆண்டில் குறைந்தது ஒருமுறையாவது அவரைத் தாக்கியதை கிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் கிருஷ்ணனின் தாக்குதல்கள் மோசமடைந்தன.
மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை திருவாட்டி மல்லிகா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கிருஷ்ணன் அதிகமாகத் தாக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி மல்லிகா தலையில் ஏற்பட்ட காயத்தால் மாண்டார் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அதேவேளை, அவரின் உடலில் வேறு பல காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கு அடுத்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.