மது அருந்திவிட்டுக் காதலியுடன் சண்டையிட்டு அவரை அடித்துக் கொன்ற எம்.கிருஷ்ணன் எனும் 40 வயது ஆடவருக்கு, ஏப்ரல் 22ஆம் தேதி, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மல்லிகா பேகம் ரஹ்மன்சா அப்துல் ரஹ்மான் எனும் 40 வயது மாதை அவ்வாறு அடித்துக் கொன்றார்.
ஏற்கெனவே வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருந்த கிருஷ்ணன், சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்தித் தன் காதலியுடன் சண்டையிடுவது வழக்கம்.
அந்நிலையில் மல்லிகா தான் வேறு ஆடவர்களுடன் உறவில் இருப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து சினமுற்ற கிருஷ்ணன் அவரைத் துன்புறுத்தினார். உட்லண்ட்சில் உள்ள வீட்டில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த சண்டையில் மல்லிகாவை அவர் தாக்கினார்.
தலையில் ஏற்பட்ட காயத்தால் மல்லிகா மாண்டார். அவரது நெஞ்சுக் கூட்டு எலும்பு முறிந்ததுடன் உடலெங்கும் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன.
முதலில் கிருஷ்ணன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
உளவியல் மதிப்பீட்டில் கிருஷ்ணனுக்குச் சிறிதளவு மனக்கோளாறு இருந்தபோதும் அவர் தன் கட்டுப்பாட்டை இழக்கும் அளவிற்கு அது பாதிக்கவில்லை என்றும் அவர் மதுபோதையில் அவ்வாறு வன்செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு, நோக்கமின்றி மரணம் விளைவித்ததாகக் குறைக்கப்பட்டது. அக்குற்றச்சாட்டை இவ்வாண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கிருஷ்ணன் ஒப்புக்கொண்டார்.
ஏற்கெனவே 2015 டிசம்பர் முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவர் குடும்ப வன்முறைக்காக மனநல ஆலோசனை பெற்றுவந்தார்.
2019 ஜனவரி 15ஆம் தேதி இரவு அவர் மல்லிகாவைக் கடுமையாகத் தாக்கினார். மறு நாள் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மல்லிகா வீடு திரும்பினார். அன்றிரவு மீண்டும் மல்லிகாவைத் தாக்கிய கிருஷ்ணன், அவர் அசைவற்றுக் காணப்படவே ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரை உதவிக்கு அழைத்தார். பின்னர் நண்பர் வீட்டுக்குச் சென்று தூங்கிவிட்டு, பிற்பகலில் காவல்துறையிடம் சரணடைந்தார்.