கிராஞ்சி வட்டாரத்தில் உள்ள மறுசூழற்சி, கழிவு நிர்வாக நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் மார்ச் 28ஆம் தேதி அதிகாலை தீ மூண்டது.
அதிகாலை 2.25 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதையடுத்து, 11 கிராஞ்சி கிரசெண்ட்டிற்கு 10 அவசரகால வாகனங்களுடன் ஏறத்தாழ 50 தீயணைப்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது வா அண்ட் ஹுவா நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பு அந்தக் கட்டடத்திலிருந்து 25 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவம் காரணமாக யாரும் காயமடையவில்லை என்று நம்பப்படுகிறது
தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடினர்.
நண்பகல் நிலவரப்படி, பாதிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் தீப்பிடித்துக்கொள்ளாதிருக்க தேவையான பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.