மின்சைக்கிளின் மின்கலன் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, ஜாலான் புக்கிட் மேராவில் அமைந்துள்ள சந்தையில் மூன்று கடைகள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
தீச்சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
தீச்சம்பவம் புளோக் 112 ஜாலான் புக்கிட் மேராவில் நிகழ்ந்தது. அங்கு சந்தை மற்றும் உணவு நிலையம் அமைந்துள்ளன.
தரைத்தளத்தில் சந்தைக் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்மிதிவண்டி தீப்பிடித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் நிகழ்வதற்குக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு முன்பு கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் மின்னூட்டப்பட்ட தனியார் நடமாட்டச் சாதனம் தீப்பிடித்துக்கொண்டது.
அதன் காரணமாக மூவர் மருத்துவரமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனியார் நடமாட்டச் சாதனங்களுடன் தொடர்புடைய தீச்சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் 31 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.