பொருளியல் வளர்ச்சிக் கழக நிர்வாகக் குழு உறுப்பினரான திரு டேமியன் சான் சீ வெங், மே 1ஆம் தேதி சிங்கப்பூர் உணவு அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பார்.
தற்போதைய தலைமை நிர்வாகி திரு லிம் கொக் தாய், 51, பொதுச் சேவைத் துறையிலிருந்து ஓய்வுபெறுவார்.
திரு சான், 51, ஹியுமன் கேபிட்டல் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவராகவும் உள்ளார்.
பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் அவர் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தொழில்துறை மேம்பாடு, கொள்கை, திட்டமிடுதல் ஆகியவற்றை அவர் மேற்பார்வையிட்டார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரின் வேளாண், உணவுத் துறையின் வளர்ச்சியில் திரு சான் வகித்த தலைமைத்துவத்தின் பொருட்டு, ஏற்புடைய அனுபவத்துடன் அவர் சிங்கப்பூர் உணவு அமைப்புக்கு வருகிறார்,” என்றது.
பொதுச் சேவைத் துறையிலிருந்து திரு லிம் ஓய்வுபெறுவது குறித்து பேசிய அமைச்சு, உணவு அமைப்பில் அவரது தலைமைத்துவத்திற்கும் பங்களிப்புகளுக்கும் தனது நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொண்டது.