சிங்கப்பூரின் ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள ஓர் அலுவலகம், தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளை இந்த வட்டாரத்தில் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.
அந்த அலுவலகத்தின் நுழைவாயிலில் பெயர்ப் பலகை எதுவும் இல்லை. வெறிச்சோடிய அலுவலகத்திற்குள் சில மேசைகள் மட்டும் உள்ளன.
நிர்வாகச் சேவைகள் வழங்கும் நிறுவனமாக அந்த இடம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், சீனாவின் ஆகப்பெரிய மின்சிகரெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் வட்டாரத் தலைமை அலுவலகமாக அது செயல்பட்டு வருவதாகத் துப்பு கிடைத்தது.
சீனாவிலிருந்து தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா போன்ற இந்த வட்டார நாடுகளுக்கு மின்சிககெரட்டுகள் அனுப்பப்படுவதை அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அறிந்துள்ளனர்.
அவர்களில் இருவர்தான் அதன் செயல்பாடுகள் குறித்து துப்புத் தந்து உள்ளனர். அவ்விருவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அந்த அலுவலகம் 2019ஆம் ஆண்டு முதல் இங்கு இயங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளை அணுகினர்.
இங்குள்ள அலுவலகப் பணியாளர்களுக்கும் சீனாவின் நிறுவனத்தில் மூத்த மேலாளர்களாகப் பணியாற்றும் இரு சிங்கப்பூரர்களுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் என்று கூறி ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட குரல்பதிவை அந்த செய்தித்தாளிடம் அவர்கள் வழங்கினர்.
இருப்பினும் அந்த அலுவலகம் மின்சிகரெட்டுகளை இருப்பு வைத்திருக்கவில்லை. சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு முதல் மின்சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை வாங்குவது, பயன்படுத்துவது அல்லது வைத்துக்கொள்வது சட்டவிரோதம்.
இந்த வட்டாரத்திற்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள மின்சிகரெட் விநியோகத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் கணினிகளை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மின்சிகரெட்டுக்குள் அடைக்கப்படும் திரவங்களையும் தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கு அனுப்பும் பணியிலும் அந்த அலுவலகம் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.
இந்த விநியோகத்தில் ஈடுபட்டு உள்ள சீனாவின் ஆகப் பெரிய மின்சிகரெட்டு நிறுவனம் 2020ஆம் ஆண்டில் மட்டும் 2.2 பில்லியன் யுவான் (S$415 மில்லியன்) மதிப்புள்ள மின்சிகரெட்டுகளை விற்பனை செய்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தைக் கண்காணித்து வருவதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அது கூறியது.