காமன்வெல்த் வட்டாரத்தில் பிப்ரவரி 3ஆம் தேதியன்று நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 20 வயது ஆடவர், தனியாகச் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கான அறிகுறி ஏதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.
கத்தி, அரிவாள், தமது கைகள் ஆகியவற்றால் அந்த ஆடவர் ஏழு பேரைத் தாக்கியதாக பிப்ரவரி 4ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் காவல்துறை கூறியது.
அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக சந்தேக நபர்மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு அந்தச் சந்தேக நபருக்கு எதிராகக் குற்றப் பதிவுகள் இருந்ததில்லை என்று காவல்துறை கூறியது.
அவரை மனநலக் கழகத்தில் அனுமதித்து, மனநலப் பரிசோதனை நடத்த அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரிவாளை ஏந்திக்கொண்டு 301 காமன்வெல்த் அவென்யூயை நோக்கி ஆடவர் ஒருவர் ஓடிக்கொண்டிருந்ததாக பிப்ரவரி 3ஆம் தேதி இரவு 7.05 மணி அளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து, இரவு 7.18 மணி அளவில் அங்கிருந்து 400 மீட்டர் தூரத்தில் இருக்கும் 1 டன்டீ சாலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவரை மடக்கிப் பிடிக்க பொதுமக்கள் பலர் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலில் இரண்டு ஆடவர்களுக்கும் 6 வயதுச் சிறுமிக்கும் இலேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர்களை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயம் அடைந்த ஆடவர்களுக்கு 40 மற்றும் 76 வயது.
தாக்குதல் காரணமாக மேலும் மூன்று ஆடவர்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இலேசான காயங்கள் ஏற்பட்டன. ஆனால், அவர்கள் மருத்துவ உதவி தேவையில்லை என்று கூறிவிட்டனர்.
சம்பவ இடத்தை காவல்துறை அடைவதற்கு முன்பு, சந்தேக நபரை மடக்கிப் பிடித்த திரு கங்காதரன் சரவணன், திரு மோக் குவோங் ஹெங், திரு இமானுவல் யீ ஆகிய மூவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தாக்குதலில் காயமடைந்தவர்களில் திரு யீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.
பொது இடங்களில் ஆயுதங்களை வைத்திருப்பது குற்றம் என்று பொதுமக்களுக்குக் காவல்துறை நினைவூட்டியது. அவ்வாறு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.