‘லெலெ’ பாண்டா குட்டி சீனாவின் செங்டு நகருக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கேற்ப தற்போது அது சீனாவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டாய் வனவிலங்குக் குழுமமும் சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றன.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் லெலெக்கு முன்று வயதாகும். சீனாவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள ரிவர் வாண்டர்ஸ் பகுதியில் அது முதலில் நாலரை வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டது.
இப்போது இரண்டாம் கட்டமாக லெலெ குவாங்-அன் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கும் காலகட்டத்தில் சீனாவின் வனவிலங்கு அதிகாரிகள் லெலெவைக் கூர்ந்து கவனிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சீனாவில் 30 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் சின்ஹுவா செய்தி அமைப்பு தெரிவித்தது.
ஒப்பந்தங்களின்படி வெளிநாடுகளில் பிறக்கும் பாண்டாக்கள் இரண்டு வயதானவுடன் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படும்.