ஊழல் குறித்த மக்கள் செயல் கட்சியின் (மசெக) நிலைப்பாடு பேரத்துக்கு அப்பாற்பட்டது; அது மசெக மரபணுவின் ஒரு கூறு போன்றது எனத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அரசியல் காரணத்துக்காக இந்த நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளுதல், தளர்த்துதல், உண்மையை மறைத்து ஏமாற்றுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
“நேர்மை, ஊழல் எதிர்ப்பு, நன்னடத்தை ஆகியவை தொடர்பில் உயர்தரத்தைக் கட்டிக்காக்க, மசெக அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் தொடர்ந்து செய்யும். சிங்கப்பூரர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அப்படித்தான் கட்டிக்காத்து வருகிறோம்,” என்று துணைப் பிரதமர் கூறினார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றத்தில் 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சில மணி நேரத்தில் திரு வோங் செய்தியாளர்களிடம் பேசினார்.
திரு ஈஸ்வரன் மீது, இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளும் அரசாங்கச் சேவையில் இருந்தபோது தொடர்பில் இருந்தவரிடம் சலுகைகளைப் பெற்றுக்கொண்டது தொடர்பில் 24 குற்றச்சாட்டுகளும், நீதித் துறை தனது கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
திரு ஈஸ்வரன் இத்தகைய சூழலில் அரசியலிலிருந்து விலகுவது குறித்து கட்சி வருத்தமும் ஏமாற்றமும் அடைவதாகத் துணைப் பிரதமர் குறிப்பிட்டார். இது மக்கள் செயல் கட்சியின் மனஉறுதியைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
“ஆனால், இந்த அரசியல் பாதிப்பு காரணமாக, ஊழலை அறவே சகித்துக்கொள்ளாமை எனும் கட்சியின் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள அனுமதிக்க இயலாது,” என்று திரு வோங் கூறினார்.
ஆகவேதான், மசெகவும் அரசாங்கமும் சிங்கப்பூரின் செயல்முறையை ஊழலற்றதாக வைத்திருப்பதற்கு, ஆன அனைத்தையும் தொடர்ந்து செய்யும் என்றார் அவர்.
சிபிஐபி எனும் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு திரு ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது முதல் அரசாங்கம் இந்த விவகாரத்தை அணுக்கமாகக் கண்காணித்தது.
சிபிஐபி விசாரணை முடிவுற்றதும் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அந்த விசாரணை முடிவுகளை மதிப்பீடு செய்த பிறகு ஈஸ்வரன் மீது குற்றஞ்சாட்ட அவர்கள் முடிவெடுத்தனர் என்று திரு வோங் கூறினார்.
நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திரு ஈஸ்வரன் மறுத்தார். அவர், $800,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, மசெகவின் தலைமைத்துவ மாற்றத்தைப் பாதிக்காது என்று கூறிய துணைப் பிரதமர், திட்டமிட்டபடி அது நடைபெறும் என்று உறுதிகூறினார்.