சரியான வெப்பநிலையில் வைக்கப்படாததாகக் கூறப்படும் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளைச் சோதனையிட மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் தனியார் வங்கியான கார்ட்லைஃப் நிறுவனம் அனுப்பிவைத்துள்ளது.
பாதிப்படைந்த ரத்த மாதிரிகளில் பெரும்பாலானவை சோதனைக்காக மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தொப்புள்கொடி ரத்த மாதிரிகளைக் கட்டம் கட்டமாகச் சோதனையிட இந்த மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடம் சுகாதார அமைச்சிடமிருந்து உரிமம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இனி எஞ்சியுள்ள ரத்த மாதிரிகள் சோதனைக்காக ஜனவரி 18ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும் என்று கார்ட்லைஃப் நிறுவனம் தெரிவித்தது.
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றிருக்கும் கார்ட்லைஃப் நிறுவனம் ஜனவரி 17ஆம் தேதியன்று இதுகுறித்து அறிவித்தது.
தமது பங்குகளை வாங்கவும் விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அது கோரிக்கை விடுத்துள்ளது.
கார்ட்லைஃப் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சில தொப்புள்கொடி ரத்தம் சரியான வெப்பநிலையில் வைக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தொப்புள்கொடி ரத்தத்தின் நம்பகத்தன்மை குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்துகிறது.
இந்த விசாரணை ஏறத்தாழ ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியன்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்தார்.
இதற்கிடையே, தொப்புள்கொடி ரத்த மாதிரிகள் சோதனை நிறைவடைவதற்கு மூன்றிலிருந்து ஆறு வாரங்கள் எடுக்கக்கூடும் என்று கார்ட்லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் குழுத் தலைமை நிர்வாகியுமான திருவாட்டி டான் போ லான் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதால் மேல் விவரங்களை வெளியிட முடியாது என்று அவர் கூறினார்.