சிங்கப்பூரில் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் வங்கிகளில் எத்தனை முறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஜனவரி 10ஆம் தேதியன்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி பேசினார்.
அண்மையில் ‘கோர்ட்லைஃப்’ நிறுவனத்தின் வசமிருந்த தொப்புள்கொடி ரத்தம் சேதமடைந்த சம்பவத்தை அடுத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் சட்டம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் (தொப்புள்கொடி ரத்த வங்கிச் சேவை) விதிமுறைகளின்கீழ் சோதனை மேற்கொள்ளுதல், கண்காணித்தல், புகார் அளித்தல் ஆகியவை தொடர்பான நிபந்தனைகளும் மறுஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கணிசமான வர்த்தகச் செலவுகளும் விதிமுறைகளால் ஏற்படும் சுமையும் எழும் என்று அவர் எச்சரித்தார்.
இடர்ப்பாடு அடிப்படையிலான அணுகுமுறையை அரசாங்கம் முடிந்தவரை இந்த விவகாரம் தொடர்பில் கையாளும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை சுகாதார அமைச்சு அதன் வழக்கமான சோதனைகளை ஈராண்டுக்கு ஒருமுறை நடத்திவரும் நிலையில் மேலும் அதிகமான சோதனைகளை நடத்துவதன் தேவை குறித்து மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹனி சோ கேட்ட கேள்விக்கு திரு ஜனில் பதிலளித்தார்.
இதுவரை சிங்கப்பூரிலுள்ள அனைத்து தொப்புள்கொடி ரத்த வங்கிகளிலும் ஈராண்டுக்கு ஒருமுறை சோதனைகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் விதிமீறல் இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தப்படுவதும் உண்டு.