இவ்வாண்டு $32 பில்லியன் முதல் $38 பில்லியன் வரையிலான கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிசிஏ எனும் சிங்கப்பூரின் கட்டட, கட்டுமான ஆணையம் ஜனவரி 15ஆம் தேதியன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு $33.8 பில்லியன் மதிப்புள்ள கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, $27 பில்லியனுக்கும் $32 பில்லியனுக்கும் இடைப்பட்ட ஆரம்பக்கட்ட கட்டுமானத் தேவையைவிட அதிகம்.
இதற்கு அதிக விலையுள்ள ஒப்பந்தக் குத்தகையே காரணம். அது மட்டுமல்லாமல் பல தனியார் குடியிருப்புத் திட்டங்களை விரைவாக கட்டி முடித்தல் மற்றும் அதிகரித்துள்ள குடியிருப்புத் திட்டங்கள் போன்றவை இதர காரணங்கள் என்று அது கூறியது.
2024ஆம் ஆண்டில் மொத்த தேவையில் பொதுத் துறையின் பங்களிப்பு 55 விழுக்காடு என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மதிப்பு $18 பில்லியன் முதல் $21 பில்லியன் வரை இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
இவற்றில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் (பிடிஓ), குறுக்குத் தீவு எம்ஆர்டி ரயில் தடத்தின் இரண்டாவது கட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தம், சாங்கி விமான நிலையம் முனையம் 5க்கான உள்கட்டமைப்புப் பணிகள், துவாஸ் துறைமுக மேம்பாட்டுப் பணிகள், முக்கிய சாலை மற்றும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகள் போன்ற வரவிருக்கும் பல பெரிய திட்டங்களும் அடங்கும்.
2024ஆம் ஆண்டில் தனியார் கட்டுமானத் திட்டங்களின் பங்கு $14 பில்லியன் முதல் $17 பில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவரங்களை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்டார்.
பிசிஏ மற்றும் சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தினார்.
குறிப்பாக அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் குடியிருப்பு மேம்பாடுகள், இரண்டு ஒருங்கிணைந்த உல்லாசத் தளத்தின் விரிவாக்கம், வணிக வளாகங்களின் மறுமேம்பாட்டுப் பணிகள் மற்றும் தொழிற்துறை வசதிகள் ஆகியவற்றிலிருந்து கட்டுமானத்திற்கான தேவை இருக்கும்.
2025 முதல் 2028 வரை ஆண்டுக்கு $31 பில்லியன் முதல் $38 பில்லியன் வரையிலான கட்டுமானத் திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் பொதுத் துறையின் பங்களிப்பு மட்டும் ஆண்டுக்கு $19 பில்லியன் முதல் $23 பில்லியன் வரை இருக்கும்.