சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி $6,600 பெறுமானமுள்ள கொவிட்-19 மானியங்களைப் பெற்றுக்கொண்ட பெண்ணுக்கு 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட மோசடி மற்றும் போலி ஆவணம் சமர்ப்பித்தல் குற்றச்சாட்டுகளை சீன நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 39 வயது சென் சியாவ் ஒப்புக்கொண்டார்.
அந்த மானியங்களுக்கு அவர் தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின் காரணமாக வேலை இழந்தோருக்கு அந்த மானியம் வழங்கப்பட்டது.
ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பாகவே சென் வேலை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென் சமர்ப்பித்த ஆட்குறைப்புக் கடிதத்தில் இருந்த எழுத்துகள் பல்வேறு அளவுகளில் இருந்ததை அமைச்சின் அதிகாரி கவனித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் போலியானது என்ற சந்தேக ஏற்படவே, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அமைச்சை ஏமாற்றி பெற்றுக்கொண்ட தொகையை சென் திருப்பிக் கொடுத்துவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
மோசடிக் குற்றத்துக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.