மோசடி மூலம் கிடைத்த கிட்டத்தட்ட $500,000ஐ பெற்றுக்கொள்ள பல வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும் பணத்தை வெளிநாடுகளில் இருக்கும் மின்நாணயக் கணக்குகளுக்கு அனுப்பியதாகவும் ஆடவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையக் காதல் மோசடி குறித்து கடந்த ஆண்டு மே மாதம் புகார் அளிக்கப்பட்டதாக ஜனவரி 10ஆம் தேதியன்று காவல்துறை கூறியது.
அந்த மோசடியுடன் தொடர்புடைய பணம் 47 வயது ஆடவருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகத்துக்குரிய வகையில் பெறப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்ள தமது பெயரில் பல வங்கிக் கணக்குகளை அவர் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மோசடியில் சிக்கிய பெண் ஒருவரிடமிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த ஆடவர் $50,000 பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.
இணையம் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் கூறி, அந்த ஆடவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவையை வழங்கியது, மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை வைத்திருந்தது ஆகிய குற்றங்களின் பேரில் அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவை வழங்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $125,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடி மூலம் பெறப்படும் பணத்தை வைத்திருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.