பொதுத் துறை கட்டுமானங்களின் தரத்தை மேம்படுத்தவும் அதில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைப் பகிர்ந்தளித்து கட்டுமான நிறுவனங்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளை குறைக்கும் விதத்திலும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்கள் சமர்ப்பிக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மதிப்பீடு செய்யப்படும்.
உதாரணமாக, அரசாங்கம் கட்டுமானத் திட்டங்களைத் தேர்வு செய்வதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்வதை விட தகுதி அடிப்படையிலான திட்டங்கள் தேர்வு செய்யப்படுவது அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட தரநிலைக்குக்கீழ் பெறப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் தேர்வு செய்யப்படும் தகுதியை இழக்கும். இது போட்டி நிறுவனங்களுக்கு இடையேயான விலைக் குறைப்பை தடுக்கும்.
மேற்கூறிய அறிவிப்புகளை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கட்டட, கட்டுமான ஆணையமும் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர் சங்கமும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் வெளியிட்டார்.
இது குறித்த மேல்விவரங்கள் எதிர்வரும் மாதங்களில் அறிவிக்கப்பட்டு அவை ஆண்டுப் பிற்பகுதியில் நடப்புக்கு வரும் என்று அறியப்படுகிறது.
இதன் தொடர்பில், பொதுத் துறை கட்டுமானத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டாண்டர்ட் கன்சல்டன்சி அக்ரீமண்ட்’ என்ற வழக்கமான ஆலோசனை சேவைக்குரிய ஒப்பந்தத்திலும் மாற்றம் செய்யப்படும். இதன்மூலம் கொள்முதல் நடைமுறை நியாயமாகவும், முற்போக்கு அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் இனி தங்களது சேவை பற்றி தெளிவாகத் தெரிந்திருப்பர். அத்துடன், அவை நியாயமான முறையில், குறித்த நேரத்தில் ஊதியம் பெறுவதுடன் எதிர்பாரா நிகழ்வுகள் ஏற்படும்போது இடர்ப்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும் என்று திரு லீ விளக்கினார்.
“உதாரணமாக, கட்டுமானத்தில் கணிசமான காலதாமதம் ஏற்பட்டால், அந்தக் காலதாமதம் ஆலோசனை நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் மீறிச் செல்லும்போது அதற்காகும் செலவை அந்நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளலாம்,” என்று அமைச்சர் லீ சொன்னார்.
இதுபோன்ற செயலைப் பகிர்ந்துகொள்ளும் முறை அரசாங்க அமைப்புகள், கட்டுமான நிறுவனங்களுக்கு இடையே ஏற்கெனவே உள்ளது. அதில் முக்கிய கட்டுமானப் பொருள்களின் விலை மாற்றத்துக்கு ஏற்ப ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விலைப் பதிவும் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.