சென்னை: கரிம வெளியேற்றம் இல்லாத இந்தியாவின் முதல் தொழிற்பூங்கா சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.
அப்பூங்காவில் மின்சார வாகனங்களையும் மின்சாரப் பொருள்களையும் உற்பத்தி செய்ய தமிழகம் எண்ணம் கொண்டுள்ளது.
சிங்கப்பூரும் தமிழ்நாடும் இணைந்து நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட அந்த தொழிற்பூங்காவை உருவாக்குவதற்கான இணக்கக் குறிப்பு சென்ற ஆண்டு கையெழுத்தானது. தமிழ்நாடு மாநிலத் தொழில்துறைகள் மேம்பாட்டு அமைப்பும் (சிப்காட்) சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சில் இடம்பெறும் சிங்கப்பூர்-இந்திய பங்காளித்துவ அலுவலகமும் அதில் கையெழுத்திட்டன.
சென்ற ஆண்டு மே மாதம் தமிழக முதலைமைச்சர் மு. க. ஸ்டாலின் சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது அந்த இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.
கரிம வெளியேற்றம் இல்லாத தொழிற்பூங்காவுக்கான திட்டமிடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. பூங்காவை நிர்வகிப்பது, கரிம வெளியேற்றத்தைக் கணக்கிடுவது போன்றவற்றுக்கான வழிமுறைகள் அடங்கும் கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொண்டு வருகின்றன.
தொழிற்பூங்கா அமைக்க வட சென்னையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளும் கட்டமைப்பில் அடங்கும்.
சென்னையில் மின் சாதனப் பொருள் உற்பத்தி அதிகம் இடம்பெற்று வந்துள்ளது. நோக்கியா, சம்சுங் போன்ற பிரபல நிறுவனங்கள் சென்னையில் உற்பத்தி செய்வதாக சிப்காட் இயக்குநர் கே. செந்தில் ராஜ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“கரிம வெளியேற்றம் அறவே இல்லாத மின்சாரப் பொருள், மின்சார வாகன உற்பத்திப் பகுதியை உருவாக்க விரும்புகிறோம்,” என்றார் டாக்டர் ராஜ்.
“உலகளவில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் போக்கு நிலவி வருவதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கரிம வெளியேற்றம் அறவே இல்லாத தொழிற்பூங்காவை உருவாக்குவதில் முன்னணி வகிக்க விழைகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் முதல் கரிம வெளியேற்றம் இல்லாத தொழிற்பூங்காவுக்கான கட்டமைப்பு பற்றிய கலந்துரையாடல் இம்மாதம் ஏழாம் தேதியன்று நடைபெற்றது. சென்னையில் நடந்த ‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர் சந்திப்பு 2024’ எனும் நிகழ்ச்சியில் அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.